சொத்துக் குவிப்பு வழக்கை ஜெ. இழுத்தடிக்கிறார்.. விசாரணையை விரைந்து நடத்துங்கள்: கர்நாடகா வாதம் ரெடி
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளி வைக்க முயலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்புக்கு ஷாக் கொடுக்க முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு. வழக்கை மேலும் ஒரு வாரம் ஒத்தி வைக்க கோரிய ஜெயலலிதா தரப்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நாடக தரப்பு முடிவு செய்துள்ளது. நாளைய விசாரணையின்போது, தனது எதிர்ப்பை கர்நாடகா தெரிவிக்க உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை பிப்ரவரி 23ம் தேதி முதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தினசரி விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விசாரணையை மேலும் ஒருவாரம் தள்ளி வைக்குமாறு சுப்ரீம்கோர்ட்டில் ஜெ. தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு பற்றி நாளை சுப்ரீம்கோர்ட் முடிவெடுக்க உள்ளது. அதேநேரம், ஜெயலலிதா கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நாடக அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
கர்நாடக தரப்பு, நாளை தாக்கல் செய்ய உள்ள மனுவில், ஜெயலலிதா வேண்டுமென்றே, வழக்கை ஒத்திப்போட முயலுவதாக குற்றம்சாட்டப்பட உள்ளதாம். ஜனவரி மாதம் ஒருமுறை, இப்படித்தான் ஜெ. தரப்பு வழக்கை ஒத்திப்போட கோரிக்கைவிடுத்ததையும், கர்நாடக தரப்பு சுட்டிக்காட்ட உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஏற்கனவே பல ஆண்டு காலம் தாமதமான வழக்கு என்பதையும், இனியும் தாமதிக்காமல் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதையும், கர்நாடக தரப்பு சுட்டிக்காட்ட உள்ளதாம்.
இதனிடையே, பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டாலும், அதை வாரக்கணக்கில் இழுத்தடிக்காமல் விரைந்து பெஞ்ச்சை நிர்ணயிக்க வேண்டும் என்பது கர்நாடக தரப்பு வாதமாக இருக்கப்போகிறதாம்.












Click it and Unblock the Notifications