ஜெ. வக்கீல் நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்- கொலிஜியம் பரிந்துரை
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட 4 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை அளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா சார்பாக ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தவர் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்.

இதேபோல் மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சார்பாகவும் நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதாடினார். இவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2009-2014) அரசில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார். இந்த பதவியை அண்மையில்தான் நாகேஸ்வரராவ் ராஜினாமா செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலிஜியம் அமைப்பு நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட 4 பேரை நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திராசூட், மத்திய பிரதேர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் ஆகியோரது பெயர்களையும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு பல ஆண்டுகளாக இருந்த கொலிஜியம் முறையை (நீதிபதிகளை கொண்ட தேர்வு குழு) மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை தேசிய ஜனநயாகக் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்தது.
இதையடுத்து 15 மாதங்களுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் ஏற்படும் நிலையில் நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் 7-வது நீதிபதியாக இருப்பார்.












Click it and Unblock the Notifications