சட்டவிரோத பணத்தை சசிகலாவுக்கு அன்பளிப்பாக கொடுத்து பின் கடனாக வாங்கிய ஜெ.: ஆச்சார்யா திடுக் தகவல்
டெல்லி: சட்டவிரோதமான பணத்தை சசிகலாவுக்கு அன்பளிப்பாக கொடுப்பது போல் கொடுத்து அதையே கடனாக திரும்ப வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகா அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தரப்பு இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வாதங்களுக்கு பதில் அளித்து கர்நாடகா அரசின் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது வாதங்களை முன்வைத்து வருகிறார். அவர் நேற்று தமது இறுதிவாதத்தில் முன்வைத்ததாவது:
ஜெயலலிதா தமக்கு வந்த சட்டவிரோதமான பணத்தை அவரது தோழி சசிகலாவுக்கு அன்பளிப்பாக மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் இதை சசிகலாவிடம் இருந்து மீண்டும் கடன் என்ற பெயரில் ஜெயலலிதா திரும்ப பெற்றிருக்கிறார்.
சசிகலா உள்ளிட்டோரின் பெயரில்தான் பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. சட்டவிரோத வருவாயை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஜெயலலிதா பொதுச்செயலராக இருக்கும் அதிமுகவும் கூட சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அதிமுக கட்சியில் மட்டுமல்ல ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டிலும் சசிகலாவின் அதிகாரமே ஓங்கி இருக்கிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் பிவி ஆச்சார்யா இன்று தமது வாதங்களை நிறைவு செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications