பீகார் வரை பற்றி எரிந்த ஆளுநர் ரவியின் ஆக்ஷன்.. ஸ்டாலினுக்கு ஆதரவாக மல்லுக்கு வந்த ஐக்கிய ஜனதாதளம்!
பாட்னா: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவெடுத்த ஆளுநருக்கு பீகாரில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநர் ரவியின் முடிவை ஆட்சேபித்துள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து, ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜேடியு கண்டனம்: இதற்கிடையே, ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தன. ஆளுநருக்கு இதற்கு அதிகாரமே இல்லை என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. அகில இந்திய அளவிலும் இந்த விவகாரம் பேசப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சியுமான நீரஜ் குமார் கூறுகையில், "அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள வழக்குகளில் அவர் இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அவரது பதவி நீக்கம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என குற்றம்சாட்டினார்.
ம.பியில் ஏன் செய்யல?: மேலும், "தமிழக அமைச்சர் பாஜகவுக்கு எதிரான கட்சி என்பதால் ஆளுநர் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். வியாபம் ஊழல் விவகாரத்தில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கும்போது ஏன் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அங்கு பாஜகவுக்கு எதிரான கூட்டணிகளின் ஒன்றிணைவு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆளுநரின் நடவடிக்கைக்கு முதல் குரலாக ஐக்கிய ஜனதா தளம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications