ஜார்க்கண்ட் சிறையில் இருந்து பீகார் நிதிஷ் ஆட்சி கவிழ்ப்புக்கு லாலுபிரசாத் சதி?விசாரணைக்கு உத்தரவு
ராஞ்சி: ராஞ்சி சிறையில் இருந்து தொலைபேசி மூலமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க லாலு பிரசாத் சதி செய்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சி அமைந்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார். பீகார் சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக எம்.எல்.ஏ. விஜய்சின்ஹா வெற்றி பெற்றார். ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் அவாத் பிகாரி சவுத்ரியை வேட்பாளராக நிறுத்தி இருந்தன.
வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்
பீகார் சபாநாயகர் தேர்தல்
சபாநாயகர் தேர்தலின் போது பீகார் சட்டசபையில் பெரும் அமளியே ஏற்பட்டது. பீகார் எம்.எல்.சி.க்கள் சட்டசபையில் இருந்ததை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கூட்டணியில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் விஜய் சின்ஹா வென்றார்.
லாலு பேரம்
இதனிடையே பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தொலைபேசி மூலம் பாஜக எம்.எல்.ஏக்களை பேரம் பேசி நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என கூறியிருந்தார்.
கொரோனா காரணம்
சபாநாயகர் தேர்தலின் போது வாக்கெடுப்பில் கொரோனாவை காரணம் காட்டி பங்கேற்காமல் தவிர்த்துவிடுங்கள் எனவும் லாலு பிரசாத் பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான ஆடியோ ஒலிப்பதிவுகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதேபோல் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியும் லாலு தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார்.
என்னை தொடர்பு கொண்ட லாலு- மஞ்சி
இது தொடர்பாக ஜிதன்ராம் மஞ்சி கூறுகையில், இரவு 11 மணியளவில் லாலு பிரசாத் என்னிடம் தொலைபேசியில் பேச முயன்றார். ஆனால் நான் பேசவில்லை. சுஷில்குமார் மோடியும் பாஜக எம்.எல்.ஏ. லாலன் பாஸ்வானும் சொல்வது 200% உண்மை என அடித்து சொன்னார். இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க லாலு பிரசாத் சிறையில் இருந்து தொலைபேசி மூலம் சதி செய்தாரா? என்பது குறித்து விசாரிக்க ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.