ஜவகர்லால் நேரு பல்கலை. விவகாரம்: பிரதமர் அலுவலகத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் விளக்கம்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் நடைபெறும் விசாரணை குறித்தும், மாணவர்கள் சிலர் மீதான தேச துரோக செயல் குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரதமர் அலுவலகத்திடம், டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கோஷமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாணவர் அமைப்பின் தலைவர் கன்யாகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேச துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டுள்ளது.

கோஷமிட்ட அடையாளம் தெரியாத மாணவர்களை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது. தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த நிகழ்வுகள் குறித்து பிரதமர் அலுவலகத்திடம் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் கொடுத்தார்.
அப்போது, கன்யாகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் விளக்கப்பட்டது. பாஜக அரசுக்கு எதிராகவும், பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்து பேசி வந்ததை ஒப்புக்கொண்ட கன்யாகுமார், இந்தியாவுக்கு எதிராக பேசவோ, செயல்படவோ இல்லை என்று விசாரணையின்போது தெரிவித்துள்ளாராம். இத்தகவலும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications