சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்த பேரிடி! மற்றொரு ஊழல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! பெரிய சிக்கல்
விசாகப்பட்டினம்: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார். இதற்கிடைடேய மற்றொரு ஊழல் புகாரில் சந்திராபாபு நாயுடு முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், அந்த மனுவை ஆந்திர ஐகோர்ட் நிராகரித்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் உள்ளவர் சந்திரபாபு நாயுடு. இவர் முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டுக் கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் 9 ம் தேதி சந்திரபாபு நாயுடு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதை கண்டித்து ஆந்திரா முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது. அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதிலும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது காவல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவர் வேறு சில வழக்குகளிலும் கூட கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடு தொடர்பான 3 வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. அங்கல்லு மற்றும் உள்வட்ட சாலை சீரமைப்பு வழக்கு மற்றும் ஆந்திர ஃபைபர் கிரிட் புகார்களில் அவர் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் தர மறுத்த ஆந்திர ஐகோர்ட், மனுவை டிஸ்மிஸ் செய்ததது
அதேபோல திறன் மேம்பாட்டு வழக்கில் சந்திரபாபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த இரண்டையும் தவிரத் திறன் மேம்பாட்டு வழக்கில் ஜாமீன் மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனுக்களிலும் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளது.
இந்த மூன்றிலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications