நீதித்துறைம் எல்லை மீறுவது தவிர்க்கப்பட வேண்டும்- ஓய்வு பெறும் தலைமை நீதிபதி சதாசிவம்
டெல்லி: நீதித்துறை தனது எல்லையை மீறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் கிராமத்தில் பிறந்த பி.சதாசிவம் பல்வேறு கோர்ட்டுகளில் பணியாற்றி கடந்தாண்டு ஜூலை 19ம்தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நாளையுடன் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான் பதினெட்டரை ஆண்டுகாலம் ஹைகோர்ட் நீதிபதியாக பதவி வகித்துள்ளேன். அப்போதும், உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள காலகட்டத்திலும் ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. எனது பணியில் எனக்கு முழு திருப்தியுள்ளது.
நீதிபதிகளை நியமிக்க தற்போது உள்ள நடைமுறையே சிறந்தது என்று கருதுகிறேன். ஏனெனில் தற்போதுள்ள நடைமுறையிலும் மத்திய, மாநில அரசுகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமையுள்ளது.
நீதித்துறை எல்லையை மீறி செயல்படுவது என்பது, ஒவ்வொரு வழக்குக்கும் ஏற்றபடி மாறுபடுகிறது. சில விவகாரங்கள் ஹைகோர்ட்டினாலேயே தீர்க்கப்பட வேண்டும். தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் எனும்போது அதில் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது.
சட்டமன்றம்-நாடாளுமன்றம், அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஆகிய அரசியல் சாசனத்தின் மூன்று தூண்களும் தங்களது எல்லைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நீதித்துறை தனது எல்லையை மீறியுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன். இது தவிர்க்கப்பட வேண்டும்.
முன்னாள் நீதிபதி, ஏ.கே.கங்குலி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கடுமையாக நடந்துகொண்டதாக சில நீதிபதிகள் அதிருப்தியிலுள்ளதாக கூறப்படுவது பற்றி நான் பதில் கூற முடியாது. ஆனால் உண்மை கண்டறியும் கமிட்டியில் ஆஜராக கங்குலி வந்தபோது அவருக்கு உரிய மரியாதை அனைத்தும் அளிக்கப்பட்டது.
மேலும், கீழ் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கும்கூட சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய உதவிகள் செய்ய வேண்டும். ஆனால் ஹைகோர்ட் மட்டத்தில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை கொண்டுவருவது என்பது, நடைமுறையில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. பார்கவுன்சில், கோர்ட், மற்றும் அரசுதான் ஒன்று சேர்ந்து இதில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சதாசிவம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications