குற்றவாளிகளுக்கு அனுதாபமோ கருணையோ காட்டாமல் தண்டனை விதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: குற்றச்செயல்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு தண்டனைக் காலம் விதிக்கும் போது எவ்வித அனுதாபமும் காட்டாமல் உரிய தண்டனையை நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச சாலை விபத்தில் மரணத்தை ஏற்படுத்திய குற்றவாளி ஒருவருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை அம்மாநில உயர்நீதிமன்றம் குறைத்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் போது நீதித்துறை அனுதாபம் காட்டக் கூடாது. அது நீதித்துறை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதுடன் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும்.
குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை காலத்தை வழங்குவது நீதிமன்றங்களின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்காமல் போனால் பழிவாங்கும் போக்குக்குத்தான் அது வழிவகுக்கும்.
என்ன மாதிரியான குற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு உரிய தண்டனையை நீதிபதிகள் அவசியம் வழங்கித்தான் ஆக வேண்டும். இதனால் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் விஷயத்திலும் இப்படி கறாராக இருந்தால் எப்படி இருக்கும்!