மத்திய அமைச்சர் ஸ்மிரிதியுடன் மோதல் - மும்பை ஐ.ஐ.டி. நிர்வாகக் குழு தலைவர் அனில் ககோட்கர் ராஜினாமா!
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியுடனான மோதலையடுத்து மும்பை ஐ.ஐ.டி. நிர்வாகக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அணுசக்தி விஞ்ஞானி அனில் ககோட்கர் ராஜினாமா செய்துள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த நிலையில் மாநிலங்களின் ஆளுநர்கள், அமைச்சரவை செயலாளர்கள் என பலரும் மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐ.ஐ.டி. இயக்குநர் ரகுநாத் செவ்கோங்கர் ராஜினாமா செய்தார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி மூலம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியசாமி சம்பள பாக்கி இருப்பதாக கூறி நெருக்கடி கொடுத்ததால் அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஐ.ஐ.டி. மும்பை நிர்வாகக் குழு தலைவரான அனில் ககோட்கர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஐ.ஐ.டி. பாட்னா, புவனேஸ்வர் மற்றும் ரோபர் ஆகியவற்றின் இயக்குநர்கள் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் அனில் ககோட்கர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் ஜீரோ நேரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் எழுப்பினார். அப்போது பேசிய அவர், அண்மையில்தான் டெல்லி ஐ.ஐ.டி. இயக்குநர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் அனில் ககோட்கரும் ராஜினாமா செய்திருக்கிறார்.
இதேபோல் டெல்லி பல்கலைக் கழகத் துணைவேந்தரும் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்தியாவின் கவுரவமிக்க உலகப் புகழ் பெற்ற இத்தகைய கல்வி நிறுவனங்களில் இருந்து கல்வியாளர்கள் தொடர்ந்தும் வெளியேறுவது கவலைக்குரியதாகும் என்றார்.
ககோட்கரின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுசக்தி விஞ்ஞானி அனில் ககோட்கர்
1998ஆம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையில் அனில் ககோட்கர் முக்கியப் பங்கு வகித்தார். பின்னாளில் அவர் இந்திய அணுசக்தி கமிஷனின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்தே மும்பை ஐ.ஐ.டி.யின் நிர்வாகக் குழு தலைவராக அனில் ககோட்கர் நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications