நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. வந்த குண்டுகளை வாங்கி வீசும் கமல்நாத்.. கை கொடுத்த அரசியல் அனுபவம்
போபால்: மத்தியபிரதேச அரசை காப்பாற்றிக் கொள்வதில் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார் அந்த மாநில முதல்வரும், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவருமான கமல்நாத்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். மற்றவர்களிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். இந்தநிலையில் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் லால்ஜி தண்டன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் கமல்நாத் ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், மத்திய பிரதேச சட்டசபை உறுப்பினர் பலம் 230. அதில், 222 உறுப்பினர்கள் இருந்தனர். எனவே பெரும்பான்மைக்கு தேவை 113. ஒருவேளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரின் ராஜினாமா ஏற்பட்டால் அந்த கட்சியின் பலம் 104 விட குறையும். 107 எம்எல்ஏக்களை கொண்ட பாஜக இயல்பாக ஆட்சியைப் பிடித்து விடும்.
எனவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று சொல்வார்களே.. அதுபோல ஒரு முக்கியமான அரசியல் விளையாட்டை கையில் எடுத்துள்ளார் கமல்நாத்.

ஆளுநர் உரை
இன்று சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. அப்போது, பெரும்பான்மை இல்லாத இந்த அரசின் சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்த கூடாது என்று பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆளுநர் தனது உரையைத் தொடர்ந்தார். எனவே சுருக்கமாக, உரையை நிறைவு செய்து விட்டு கிளம்பினார். அவ்வளவுதான் தாமதம். உடனடியாக சட்டசபையை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்.

கொரோனா
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்றாக கூட கூடாது என்ற அறிவுரை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மொத்தமாக கூடியிருந்து வாக்களிப்பது இந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்காது என்று காரணம் சொல்லி விடலாம் என்று இவ்வாறு சட்டசபையை சபாநாயகர் தள்ளி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இதனால், கண்டிப்பாக முதல்வர் கமல்நாத் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நபராக மாறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது
முன்னதாக, ஆளுநருக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று பாஜகவால் வற்புறுத்தப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சரியாக இருக்காது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும், சபாநாயகரின் உரிமையில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில்தான் சட்டசபை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கிடைத்துள்ளது கமல்நாத் அரசுக்கு.

தள்ளி வைக்க திட்டம்
ஒருவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தால், சட்டசபையை கூட்ட முடியாது என்று மறுபடியும் காரணம் சொல்லி தள்ளி வைக்க முடியும். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்ததுமே, யாரை முதல்வராக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை தீவிரமாக யோசித்து வந்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராகலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் போன்ற மூத்த தலைவரை சமாளிப்பதற்கு காங்கிரசும் கமல்நாத் போன்ற மிக மூத்த தலைவரை முதல்வராக்குவதுதான் சரியாக இருக்கும் என்று கட்சியின் தலைமை முடிவெடுத்து அவரை முதல்வராக்கியது.

அனுபவம்
ஒருவகையில், ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைவதற்கு இந்த முடிவு காரணமாக இருந்த போதிலும் கூட, கமலின் அரசியல் அனுபவம் மற்றும் அறிவு இந்த இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து அரசை காப்பாற்றியுள்ளது. அவ்வளவு எளிதாக தனது ஆட்சியை அவர் பறிகொடுத்து விடமாட்டார் என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏதாவது ஒரு காரணத்தை வைத்து சபாநாயகர் மூலமாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் வெற்றி அடைவார் என்ற அச்சம் பாஜகவுக்கும் உள்ளது. இதனால்தான், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இப்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ளது பந்து. அது எந்த பக்கம் செல்லும் என்பதை, அடுத்தடுத்த நாட்களில்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications