தலித் அர்ச்சகர்கள்.. கேரளாவை பின்தொடர்ந்து கர்நாடகாவிலும் சமூக நீதி புரட்சி.. தமிழகத்தில் எப்போது?
கேரளாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் கோயில்களில் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கேரளாவைப் போல கர்நாடக மாநிலக் கோயில்களிலும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கேரள அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை அந்த மாநில அரசு வழங்கியள்ளது. இதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் நியமிக்கப்பட்ட 62 அர்ச்சகர்களில் 36 பேர் பிராமணரல்லாத சாதிகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். யதுகிருஷ்ணன் என்ற தலித் இளைஞர் மணப்புரம் கோவிலில் முதல் தலித் அர்ச்சகராக பணியைத் தொடங்கியுள்ளார். கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

கர்நாடக கோவில்களிலும்
இந்நிலையில் கேரளாவைப் போல கர்நாடக கோயில்களிலும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தலித் அர்ச்சகர்களை நியமிக்க எந்த எதிர்ப்பும் இல்லை என்றார்.

கர்நாடகா சமவாய்ப்பு
கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் சுமார் 35 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கேரளாவைத் தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகாவும் தலித் சமூகத்தினர் அர்ச்சகராவதற்காக சம வாய்ப்பை அளிக்க உள்ளது.

தமிழகத்தில் எப்போது?
இந்நிலையில் தமிழகத்திலும் நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழகத்திலும் இனியும் காலம் தாழ்த்தாமல், இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வரை சந்தித்து வலியுறுத்தினார்.

அரசு வெளியிடுமா?
இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட சில கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாடு செய்ய முடியாத நிலையை மாற்ற வேண்டும் என்றும் திருமாவளவன் கோரி இருந்தார். அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் கோயில்களில் தலித் அர்ச்சகர்களை நியமிக்கும் உத்தரவை அரசு வெளியிடுமா?












Click it and Unblock the Notifications