ரஜினி சிபாரிசால் சிங்கப்பூரில் சிகிச்சை: அம்பரீஷ் மருத்துவ செலவுக்கு ரூ.1.16 கோடி ஒதுக்கிய அரசு
பெங்களூர்: நடிகரும் கர்நாடக வீட்டுவசதி துறை அமைச்சருமான அம்பரீஷின் மருத்துவ செலவுக்கு இம்மாநில அரசு ரூ.1.16 கோடியை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செல்வந்தரான அம்பரீஷுக்காகும் செலவை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொடுக்க கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

உடல் நலக்குறைவு
கன்னட மூத்த நடிகரான அம்பரீஷ், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசில் வீட்டுவசதி துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 21ம்தேதி திடீர் உடல் நலக்குறைவால் பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிங்கப்பூர் பயணம்
பிப்ரவரி 28ம்தேதிவரை பெங்களூரில் சிகிச்சை பெற்றுவந்த அம்பரீஷ், சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மார்ச் 22ம்தேதிவரை சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று அதன்பிறகு கர்நாடகா திரும்பினார்.

ரஜினிகாந்த் யோசனை
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார். எனவே, தனது நண்பர் அம்பரீஷுக்கும், ரஜினிகாந்த் அந்த மருத்துவமனையை சிபாரிசு செய்திருந்தார். அம்பரீஷின் மனைவியும் முரட்டுக்காளை பட நாயகியுமான சுமலதாவுக்கு, லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்ததாக குணமாகிய பிறகு அம்பரீஷ் தெரிவித்திருந்தார்.

ரஜினி சிபாரிசு வேலை செய்தது
ரஜினிகாந்த்தின் சிபாரிசு வேலை செய்ததன் விளைவாக அம்பரீஷ் நலம்பெற்று திரும்பியுள்ளார். இப்போது வீட்டுவசதி துறை அமைச்சக பொறுப்புகளை அவர் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறார்.

நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், அம்பரீஷ் பெங்களூரிலும், சிங்கப்பூரிலும் பெற்ற சிகிச்சை, விமான பயண கட்டணம் ஆகியவற்றுக்கான செலவாக ரூ.1 கோடியே 16 லட்சத்தை கர்நாடக முதல்வர் ஒதுக்கியுள்ளார். அம்பரீஷின் குடும்ப உறுப்பினர்கள் விமான கட்டணமும் இதில் அடங்குகிறது.

விதிமுறையில் இடமில்லை
இந்திய அரரசின் மருத்துவ செலவுக்கான விதிமுறை 1958படி, உரிய வசதிகள் இருந்தால் கண்டிப்பாக அமைச்சர்களுக்கு தாய்நாட்டில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். வசதி குறைபாடால் வெளிநாட்டுக்கு சென்றாலும், ஒரு அமைச்சருக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவிட கூடாது என்பதுதான் அந்த விதிமுறை.

முதல்வரிடம் அதிகாரம்
இந்த சூழ்நிலையில், அம்பரீஷுக்கு ஒரு கோடிக்கும் மேல் அரசு நிதி ஒதுக்கியுள்ளதை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வரும், நிதி துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சில சந்தர்ப்பங்களில் மருத்துவ செலவீனத்துக்காக அதிக நிதி ஒதுக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது என்று பதில் அளித்தார்.

செலவுக்கு பணமில்லையா..?
'மண்டியாவின் ஆண்மகன்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், அம்பரீஷ் சினிமாவின் மூலம் நிறைய பணம் சம்பாதித்துள்ளார். அவரது மனைவியும் நடிகை என்பதால் பணத்துக்கு குறைவு கிடையாது. இருப்பினும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு செல்ல வேண்டிய அரசு பணம் அம்பரீஷுக்கு ஒதுக்கப்பட்டது கர்நாடகாவில் பலரை முனங்க வைத்துள்ளது.











Click it and Unblock the Notifications