விரைந்து தீர்ப்பு வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது
பெங்களூரு: அறக்கட்டளை தொடர்பான வழக்கு ஒன்றில் விரைவாக தீர்ப்பு வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சரவணப்பா சஜ்ஜன், ஹீல்சூரில் உள்ள ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வந்தார்.
இந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்த காசிநாத் என்பவர், பதவி காலம் முடிவதற்குள் தன்னை பதவியில் இருந்து நீக்கியதால், தனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் அளித்திருந்தார். ஆனால் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் செலுத்துமாறு அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2000-ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் காசிநாத்.

14 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப் படாமல் இருந்தது. விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டுமென்றால் ரூ. 5 லட்சம் தர வேண்டும் என காசிநாத்திடன் நீதிபதி சஜ்ஜன் பேரம் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காசிநாத், இது தொடர்பாக உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதிகாரிகள் அளித்த திட்டப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் பீதர் பசவண்ணா சிலை அருகே காசிநாத் காத்திருந்தார். அப்போது பணத்தை வாங்கிய நீதிபதி சரவணப்பாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதி சரவணப்பா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதை ஹைகோர்ட் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம் பெறும்போது உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா ஒத்துக்கொண்டுள்ளார். அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications