112 வயதான கர்நாடக துறவி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்
தும்கூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல மடாதிபதி சிவகுமார சுவாமிஜி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 112ஆகும்.
தும்கூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதிதான் மறைந்த சிவகுமார சுவாமிஜி. 1907ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ராமநகரா மாவட்டம், மகடி தாலுகாவில் உள்ள வீராபுரா கிராமத்தில் பிறந்தவர் சிவகுமார சுவாமிஜி. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமலும், வயோதிகம் காரணமாகவும் இன்று மரணமடைந்தார்.

லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மதத் துறவி சிவகுமார சுவாமிஜி. சிறந்த மனிதாபிமானமிக்க மதத் தலைவர். சுவாமிஜியின் மரணம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி இன்று காலை 11.44 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். பக்தர்கள் அமைதியான முறையில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இன்று சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டம் நடப்பதாக இருந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. முதல்வர் குமாரசாமி தும்கூரு விரைகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் பரமேஸ்வரா ஆகியோர் தும்கூரு
மடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தும்கூரு மடம் உள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தும்கூரு தவிர மைசூரு, தாவணகரே, சிவமோக்கா, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்பதால் தும்கூரிலும் சுற்றுப் பகுதிகளிலும் 14 இடங்களில் தற்காலிக ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ஹெலிகாப்டர் மூலம் தும்கூரு விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications