மும்பை: தீவிரவாத தாக்குதலில் பலியான அதிகாரியின் மனைவி கவிதா மரணம்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியான உயர் போலீஸ் அதிகாரியின் மனைவி கவிதா கர்க்கரே உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இன்று உயிரிழந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உள்பட 164 பேர் பலியானார்கள். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போராட்டத்தில் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரேயும் உயிரிழந்தார்.
மும்பை காமா மருத்துவமனை அருகே தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, எஸ்.எஸ்.பி. விஜய் சலாஸ்கர் ஆகியோருடன் ஹேமந்த் கர்காரேயும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்தபின்னர், போலீஸ் அதிகாரிகளுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் சிறந்த பயிற்சியும் போதிய வசதிகளும் செய்துகொடுக்க வேண்டும் என்று கர்காரேயின் மனைவி கவிதா கர்காரே வலியுறுத்தினார்.
கணவர் இறந்தபின் கடும் மன அழுத்தத்தில் இருந்த கவிதா கர்காரேவின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து மும்பை இந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று மதியம் கோமா நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications