2015: மோடி சூறாவளியை டெல்லி, பீகாரில் துடைத்தெறிந்த கேஜ்ரிவால், நிதிஷ்குமார் சுனாமி பேரலைகள்
டெல்லி/பாட்னா: 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாடெங்கும் வீசிய மோடி அலையை டெல்லி, பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் கேஜ்ரிவால், நிதிஷ்குமார் எனும் சுனாமி பேரலைகள் துடைத்தெறிந்த ஆண்டுதான் 2015.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நரேந்திர மோடியை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய வரலாற்றில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக 282 இடங்களைப் பெற்றது பா.ஜ.க. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இந்த வெற்றிக்கு காரணம் என பெருமிதமாக கூறப்பட்டது.

60 ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியோ 44 இடங்களில் மட்டுமே வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த மோடி அலையெல்லாம் கொஞ்ச காலம்தான்... 2015ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே டெல்லி சட்டசபை தேர்தலில் வீசிய கேஜ்ரிவால் சுனாமியில் துடைத்தெறியப்பட்டுவிட்டது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அந்த வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பல அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெறும் என கணித்திருந்தன; ஆனால் சில கருத்து கணிப்புகளோ பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும் என ஆரூடம் கூறியிருந்தன. பிப்ரவரி 10-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. நாடே பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனது.
ஆம் டெல்லி சட்டசபையின் மொத்தம் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. வெறும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது. டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்குப் போனது. 2014ஆம் ஆண்டு நாடெங்கும் வீசியதாக சொல்லப்பட்ட மோடி அலைக்கு விழுந்த முதல் மரண அடி.
அதன் பின்னர் பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. பீகார் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த லாலுவும் நிதிஷ்குமாரும் கை கோர்க்க இவர்களது அணியில் காங்கிரஸும் இணைந்து கொண்டது. பிரதமர் மோடியும் களத்துக்கு வந்து பிரசாரம் செய்து பார்த்தார். வழக்கம் போல கருத்து கணிப்புகள் பெரும்பாலானவை பா.ஜ.கதான் ஆட்சியைக் கைப்பற்றும் என களிப்புடன் ஆரூடம் கணித்தன. ஒரு சில ஊடகங்கள்தான் லாலு-நிதிஷ் அணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என கணித்திருந்தன.
தேர்தல் முடிவுகளும் வெளியாகின... தேர்தல் முடிவின் தொடக்கத்தில் பா.ஜ.க.தான் அமோக வெற்றி பெறுவதாக அனைத்து ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக கூறின... ஆனால் கள யதார்த்தமோ வேறு மாதிரியாக இருந்தது. லாலு- நிதிஷ்குமார்- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. மொத்தம் 178 இடங்களை இந்த அணி வெல்ல பாஜகவால் வெறும் 53 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
ஆம்
2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் வீசியதாக சொல்லப்பட்ட மோடி அலையை கேஜ்ரிவால், நிதிஷ் சுனாமி பேரலைகள் துடைத்தெறிந்த ஆண்டுதான் 2015!!












Click it and Unblock the Notifications