'அந்த' கொசுக்களை வைத்து டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் கெஜ்ரிவால் அரசு
டெல்லி: டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சீனாவின் உதவியை நாட உள்ளது கெஜ்ரிவால் அரசு.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெங்குவை கட்டுபடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சீன நிபுணர்களின் உதவியை நாட முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லியைச் சேர்ந்த நிபுணர்கள் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி சீனாவில் உள்ள குவான்சு தீவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் வரும் 11ம் தேதி வரை தங்கி மரபணு கொசுக்கள் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
டெங்கு காய்ச்சல் பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படுகிறது. இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்படும் ஆண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பெண் கொசுக்கள் அதிகம் உள்ள இடத்தில் விடப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்களால் இனவிருத்தி செய்ய முடியாது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க முடியும்.
குவான்சு தீவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை கொண்டு டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவிடாமல் செய்துள்ளனர். சீனாவின் இந்த தொழில்நுட்பத்தை பிரேசில் மற்றும் மலேசியாவும் பயன்படுத்தி உள்ளது.
டெல்லியில் 1996ம் ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 423 பேர் பலியாகினர். அதன் பிறகு தற்போது தான் டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.