நெகிழ்ச்சி! இறந்த மகனின் கல்லறையில் QR code வைத்த பெற்றோர்.. ஏன் என்னாச்சு?
திருச்சூர்: உயிரிழந்த மகனின் நினைவுகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து கொள்ள அவர் குறித்த விவரங்கள் அடங்கிய கியூஆர் கோடை கல்லறையில் அவருடைய பெற்றோர் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குரியாச்சிராவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மனைவி லீனா. இவர்களுக்கு ஐவின் பிரான்சிஸ் (26) என்ற மகன் இருந்தார்.
அவர் மத்திய கிழக்கு நாடான ஓமனில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். மருத்துவம் படித்த ஐவின், இசை, விளையாட்டுகளில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிண்டன் விளையாடினார்.

மயங்கி விழுந்த ஐவின்
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனால் அவருடைய பெற்றோர் மனம் உடைந்துவிட்டனர். இதையடுத்து உயிரிழந்த ஐவினின் உடல் குரியாச்சிராவிற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள ஒரு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐவின் பிரான்சிஸ் குறித்த முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

கியூ ஆர் கோடு
இதற்கான Qr code ஐயும் அவரது பெற்றோர் தயாரித்துள்ளனர். தற்போது அந்த கியூ ஆர் கோடை ஐவினின் கல்லறையில் பொறித்துள்ளனர். இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் ஐவினின் கல்லறையில் கியூ ஆர் கோடு வைக்கும் யோசனையை எங்கள் மகள் ஈவ்லின் கூறினார். எங்கள் மகள், ஐவின் குறித்து இணையதளத்தையும் கியூஆர் கோடையும் 10 நாட்களில் உருவாக்கினார். கல்லறையில் ஐவின் குறித்து எதையாவது எழுதி வைப்பதை விட இந்த கியூ.ஆர் கோடு வைத்தால் அவன் உண்மையில் என்ன செய்தான் என்பது இந்த உலகிற்கு தெரியும் என எங்கள் மகள் கூறினார். எங்களது மகனின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

கல்லறை
அதனால்தான் கல்லறையில் கியூஆர் கோடை வைத்தோம். இதை ஸ்கேன் செய்தால் ஐவின் புகைப்படங்கள் அவர் கல்லூரியில் படிக்கும் போது நடந்த நிகழ்ச்சிகள் அவர் குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். அவர் நடத்திய கீபோர்டு மற்றும் கித்தார் நிகழ்ச்சிகளையும் வீடியோவாக காணலாம். என பெற்றோர் தெரிவித்தனர்.

மறக்க முடியாத இழப்பு
பொதுவாக ஒரு வீட்டில் இறப்பு என்பது அது மனிதர்களாக இருந்தாலும் சரி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளாக இருந்தாலும் அதை நம்மால் ஜீரணிக்கவே முடியாது. இது கெட்ட கனவாக இருந்துவிடாதா என நினைப்பதுண்டு. எனினும் இயற்கையை வெல்ல முடியாது என்பதால் இறந்தவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தங்களால் இயன்ற வரை அந்த சம்பவத்திலிருந்து வெளியே வர பார்ப்பார்கள். ஆனால் இங்கோ மகனின் நினைவுகள் என்னென்றும் உயிர்ப்புடன் இருக்க கியூ ஆர் கோடு வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications