சபரிமலையில் போலி கொரோனா டெஸ்ட் சென்டர்.. தமிழக பக்தர்களிடம் தலா 2000 வசூலித்து பெரும் மோசடி
சபரிமலை : சபரிமலையில் போலி கொரோனா சோதனை கூடம் அமைத்து தமிழக ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 2000 வசூலித்து மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடந்த மண்டலகால பூஜையின் போது 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கேரள அரசு பேருந்துகளில் ஏறி பம்பையை அடைந்து அங்கிருந்து சுமார் 6மீட்டர் தூரம் செங்குத்தான மலைகளில் பயணித்து சபரிமலையை அடைந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

நெகட்டிவ் சான்றிதழ்
இந்த முறையும் அதேநடைமுறைதான் என்றாலும் கூடுதலாக நிலக்கல்லில் இறங்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழை பெற்று வர வேண்டும். அப்படி வருபவர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்தது. அந்த நடைமுறையின் படிதான் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்

ஆர்டிபிசிஆர்
இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 31ம் தேதி முதல் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் ( RT-PCR) ஆர் டி லேம்ப், எக்ஸ்பிரஸ் நாட் ஆகிய பரிசோதனை நடத்தி அதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேரள அரசு அறிவிப்பு
இந்த சூழலில் நிலக்கல் கொரோனா பரிசோதனை மையம் மூடப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், தங்கள் மாநிலங்களில் இருந்து சான்று பெற்று வந்தால் போதும் என்று கேரள அரசு அறிவித்தது. இதை அறியாத பலர், நிலக்கலில் மூடப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மையத்தை நாடி சென்றுள்ளனர்.

2000 கட்டணம்
இந்த சூழலை பயன்படுத்தி, நிலக்கல் பகுதியில் கோட்டயத்தைச் சேர்ந்த தயானுவா என்னும் பெயரில் தனியார் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது, புதிய அறிவிப்பு பற்றி தெரியாத பக்தர்கள் 2000 ரூபாய் கட்டணம் செலுத்தி,கொரோனா பரிசோதனைக்கான தங்கள் மாதிரிகளை கொடுத்துள்ளனர்.

ஏமாற்றம்
கொரோனா பரிசோதனை முடிந்தவிட்டது. இனி சான்றிதழ் வந்ததும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று எண்ணிய பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பக்தர்களுக்கு கடைசி வரை கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை இறுதி வரை வழங்கவில்லை.

அனுமதி இல்லை
இதையடுத்து அந்த மையத்திற்கு சென்று விசாரிக்கலாம் என்று பக்தர்கள் சென்ற போத அந்த மையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தலைமறைவாகி இருந்தத தெரியவந்தது. அத்துடன், அந்த மையம் வழங்கிய சான்றிதழுடன் சென்ற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த சான்றிதழ் போலி என்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

சபரிமலையில் பரபரப்பு
இதனால் பணத்தை இழந்த பக்தர்கள், போலீசில் புகார் தெரிவித்தனர். அத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பரபரப்பாக மாறியது. உடனே அங்கு வந்த போலீசாருக்கு அந்த தனியார் பரிசோதனை மையம் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தத தெரியவந்தது. இதையடுத்து சோதனை மையத்தில் பணியில் இருந்த சஞ்சய், அனந்த், அருண் ராஜா ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அனுமதி இல்லாமல் புறக்காவல் நிலையம் அருகே கொரோனா பரிசோதனை மையத்தை எப்படி அமைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. கொரோனா சோதனை பெயரில் பக்தர்களிடம் பணம் வசூலித்து பெரிய அளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications