கேரள கோவிலுக்குப் படையெடுத்த அதிமுகவினர்... ஜெ. படத்தை வைத்து மனமுருக பிரார்த்தனை! #jayalalithaa
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடா அருகில் உள்ள கோவிலில் அதிமுகவினர் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
இரிஞ்சாலகுடா, கேரளா: கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடா அருகே உள்ள கோவிலில் அதிமுகவினர் பெரும் திரளாக கூடி முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்று வேண்டி பிரார்த்தனை, அன்னதானத்தில் ஈடுபட்டனர்.
இரிஞ்சாலக்குடா அருகே உள்ள காக்கதூர்த்தி என்ற இடத்தில் காளிமலர் கவும்மா கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அதிமுகவினர் திரண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளும், பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய பிரேம் செய்யப்பட்ட போட்டோவை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவில் தலைமை குருக்கள் சிவதாசன் பூஜைகளைச் செய்தார். அதிமுகவினர் மனமுருக வழிபாடு செய்து முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்தித்துக் கொண்டனர்.
இதுகுறித்து சிவதாசன் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். இது அதிமுகவினர் மட்டுமல்ல, அனைவரின் பிரார்த்தனையும் கூட என்றார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா பெயரில் கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.