கமல்நாத்துக்கே எங்கள் ஆதரவு.. எங்கிருந்தோம் என்பதை சொல்ல மாட்டோம்.. கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள்
போபால்: கமல்நாத் அரசுக்கே எங்கள் ஆதரவை தருகிறோம். ஆனால் கடத்தப்பட்ட நாங்கள் எங்கு தங்கியிருந்தோம் என்பதை சொல்ல மாட்டோம் என மத்திய பிரதேசத்தில் கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தகிடுதத்தம் செய்து ஆட்சியை கவிழ்த்துவிட்டு அங்கு அரியணை ஏறும் முயற்சிகளில் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக அரசு கவிழ்ப்பு.
இந்த நிலையில் காங்கிரஸ் நேரடியாக ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை பாஜக குறி வைத்ததாக கூறப்படுகிறது.

ரிசார்ட்
இதன் முயற்சியாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, சுயேச்சை ஆகிய 8 எம்எல்ஏக்களை பாஜக செவ்வாய்க்கிழமை இரவு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர்கள் ஐடிசி மவுரியா ஹோட்டலிலும், கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டிலும் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போபால்
இந்த நிலையில் பிஎஸ்பி பெண் எம்எல்ஏவும் மேலும் ஒரு எம்எல்ஏவும் தப்பி வந்துவிட்டனர். இதையடுத்து பாஜக வசம் 6 காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜீத்து பட்வாரி, ஜெயவர்த்தன் சிங், தருண் பனாட் ஆகியோர் 6 எம்எல்ஏக்களையும் மீட்டெடுத்தனர். அவர்களை நேற்று மதியம் போபாலுக்கு அழைத்து வந்தனர்.

காங்கிரஸ் ஆதரவு
பின்னர் அவர்கள் அனைவரும் முதல்வர் கமல்நாத்தின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களில் சிலர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிஎஸ்பி எம்எல்ஏ தான் சொந்த ஊருக்கு செல்வதாகவும் டெல்லியில் எங்கே தங்கியிருந்தேன் என்பதை ஓரிரு நாளில் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்தார். ஆனால் அதே வேளையில் தனது ஆதரவு கமல்நாத்துக்கே என்றும் தெரிவித்தார்.

ஆதரவு
நீண்ட நாட்களாக அமைச்சர் பதவிக்கு முயற்சித்து வந்த ஐடல் சிங் கான்சானா கூறுகையில் அமைச்சர் பதவி கிடைக்காதது வருத்தமே தவிர எனக்கு அதில் கோபம் ஏதும் இல்லை. மேலும் நான் டெல்லியில் உள்ள எனது மருமகளை பார்க்க சென்றேன். என்னை யாரும் கடத்தவில்லை. என்னை கடத்த யாருக்கு தைரியம் இருக்கிறது என செய்தியாளர்களையே திருப்பி கேட்டார். இது போல் கடத்தப்பட்ட இடத்தை கூறுவதை மறுக்கும் இவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை காங்கிரஸ் அரசுக்கே கொடுப்போம் என தெரிவித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications