ஆந்திராவில் கிங்.. தேசியளவில் "கிங்" மேக்கர்! திரும்பி பார்க்க வைக்கும் சந்திரபாபு நாயுடு! யார் இவர்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு.. தேசியளவிலும் கிங் மேக்கராக மாறி இருக்கிறார். யார் இந்த சந்திரபாபு நாயுடு.. கடந்த காலங்களில் இவர் செய்தது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சந்திரபாபு நாயுடு அரசியல் வாழ்க்கை 1970களில் தொடங்கியது. அவர் முதலில் காங்கிரஸ் கட்சியிலேயே தனது அரசியலைத் தொடங்கினார். 1978ஆம் ஆண்டில், அவர் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வென்றார். 1980 முதல் 1982 வரை ஆந்திர அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.

தெலுங்கு தேசம்: இவரது மாமனார் தான் தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்றுவித்த மறைந்த என்டிஆர். அவர் முதலில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்த போது சந்திரபாபு நாயுடு அதற்கு எதிராகவே இருந்தார். இருப்பினும், 1983இல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடமே தோல்வி அடைந்தார். இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியிலேயே இணைந்தார்.
அங்கு சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் என்டிஆரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. குறிப்பாக 1984இல் என்டிஆரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் காங்கிரஸ் முயன்ற நிலையில், அதை முறியடிக்கப் பெரியளவில் சந்திரபாபு நாயுடு உதவினார். அதன் பின்னரே அவர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.
முதல்வர்: அதன் பின் 1989இல் குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் சார்பில் எம்எல்ஏவாக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இப்போது அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று வருகிறார். 1995ஆம் ஆண்டில் தனது 45 வயதில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். அவர் என்டிஆருக்கு எதிராக எப்படி முதல்வராகப் பதவியேற்றார் என்பது தனிக்கதை.. தொடர்ந்து 1999இல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் வென்று அவர் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஐடி துறை: இரண்டு முறை முதல்வராக இருந்தபோது, நாயுடுவின் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களைத் துணிச்சலாகச் செய்தார். குறிப்பாக ஐடி துறையில் அவர் கொண்டு வந்த பல மாற்றங்கள் மிக மிக முக்கியமானது. நாடு முழுக்க கணினி என்றால் என்னவென்றே தெரியாத போதே தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் ஐடி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். மேலும் ஐடி முதலீடுகளையும் ஈர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
அவரது நவீனமயமாக்கல் சிந்தனை அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவில் குறிப்பாக ஹைதராபாத்திற்குப் பல முதலீடுகளைக் கொண்டு வந்தன. அங்கு ஐடி நிறுவனங்களுக்கான HITEC City (Hyderabad Information Technology and Engineering Consultancy City) அவர் 1998இல் நிறுவினார். இன்று அமேசான் தொடங்கி உலகின் டாப் ஐடி நிறுவனங்கள் எல்லாம் ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் இருக்கிறது. அதற்கெல்லாம் அடித்தளம் போட்டதே சந்திரபாபு நாயுடு தான்.
கொலை முயற்சி: கடந்த 2003இல் அக்டோபர் 1ஆம் தேதி திருப்பதி அலிபிரி டோல்கேட் அருகே சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய முயற்சி நடந்தது. இருப்பினும், கண்ணிவெடி தாக்குதலில் இருந்து நாயுடு உயிர் தப்பினார். திருமலைக்குச் சென்று கொண்டிருந்த போது சந்திரபாபு நாயுடு வாகனத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. 17 கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் 9 வெடித்தது. இருப்பினும், சந்திரபாபு நாயுடு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதைத்தொடர்ந்து 2004இல் ஆட்சியை இழந்த அவர் 2014 வரை எதிர்க்கட்சி வரையிலேயே இருக்க வேண்டி இருந்தது. 2014இல் தான் அவர் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்க அப்போதையே மத்திய அரசு முடிவு செய்த போது, அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர்.. இருப்பினும், அவரை தாண்டி ஆந்திரா பிரிக்கப்பட்டது.
கிங் மேக்கர்: 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டார். இருப்பினும், 5 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு கம்பேக் வெற்றியைக் கொடுத்துள்ளார். 1996-2004 காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு தேசிய அரசியலிலும் கிங் மேக்கராக இருந்து இருந்தார். இப்போதைய சூழலில் தேசியளவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications