கேரளா: போதை கும்பலை ஒடுக்கிய பெண் ஐபிஎஸ் அதிகாரி டிரான்ஸ்பர்.. திருச்சியைச் சேர்ந்தவர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல்வாதிகள், சினிமா புள்ளிகளுக்கும் போதைபொருள் கடத்தல் கும்பலுக்கும் இருந்த தொடர்பை அம்பலப்படுத்திய ஐ.பி.எஸ் அதிகாரி நிஷாந்தினியை திருச்சூர் போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த நிஷாந்தினி, 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான இவர் கொச்சியில் சட்டம், ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். போதைப் பொருள் மற்றும் விபச்சார கும்பல் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் பலர் இவர் இருக்கும் வரை நிம்மதியாக தொழில் செய்ய முடியாது என நினைத்தனர்.
கொச்சியில் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு சொந்தமான 5 நட்சத்திர ஹோட்டலில் நிஷாந்தினி சமீபத்தில் சோதனை நடத்தினார். இதில் எல்.எஸ்.டி. போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அந்த ஹேட்டல் மூடப்பட்டது.
கொச்சி அருகே ஒரு சொகுசு கப்பலில் இவர் கடந்த மாதம் சோதனை நடத்தி, போதை விருந்தில் கலந்து கொண்ட கேரள பிரபலங்கள் பலரை சிக்கவைத்தார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து நிஷாந்தினியை இடமாற்றம் செய்ய அரசிடம் சிலர் நிர்ப்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் கொச்சியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் மலையாள இளம் நடிகர் ஷைன் டோம் சாக்கோ மற்றும் 4 மாடல் அழகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து மிகவும் அரிதான கோகைன் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. சர்வதேச அளவில் இந்த போதை பொருள் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச அளவில் செயல்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் மலையாள சினிமா உலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவருக் கும் வலை விரிக்க துணை கமிஷனர் நிஷாந்தினி திட்டமிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சில மலையாள சினிமா பிரபலங்களும், முக்கிய அரசியல்வாதிகளும் சேர்ந்து முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவை தொடர்பு கொண்டு நிஷாந்தினியை இடமாற்றம் செய்ய நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று அதிரடியாக நிஷாந்தினி திருச்சூர் போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த திடீர் இடமாற்றம் கேரளாவிலுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications