சஞ்சய் ராயுக்கு ஜாமீன் கொடுக்கலாமா? – லேட்டாக வந்த சிபிஐக்கு செம டோஸ் விட்ட நீதிபதி
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை எழுப்பியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் ஜாமீன் மனு விசாரணைக்கு சிபிஐ வழக்கறிஞர் தாமதமாக சென்றது சர்ச்சையாகியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தினசரி பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே சஞ்சய் ராய், ஜாமீன் கேட்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் 50 நிமிடங்கள் தாமதமாகத்தான் நீதிமன்றம் வந்துள்ளனர். அவர்கள் சஞ்சய் ராயின் ஜாமீன் மனுவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு ஜாமீன் கொடுத்தால், அது விசாரணையை பாதிக்கும் என்றும் வாதிட்டுள்ளனர். கூடுதல் தலைமை நீதிபதி பிரேமலதா, சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தாமதமாக வந்ததில் அதிருப்தியடைந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர், "சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கொடுத்துவிடலாமா" என்று கோபத்துடன் கேட்டுள்ளார். "சிபிஐ மிகவும் அலட்சியத்துடன் பணியாற்றுகிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
"சிபிஐ தரப்பு வழக்கறிஞர் உடனடியாக வராவிடின், சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிடும்" என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக நீதிமன்றம் வந்துள்ளனர். சஞ்சய் ராயின் ஜாமீன் மனு தொடர்பாக ஆவணங்களை தயாரிப்பதற்கு சற்று நேரமாகிவிட்டது என்று கூறி சிபிஐ தரப்பில் சமாளித்துள்ளனர்.
இதை கேட்ட நீதிபதி, வழக்கின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, அதிகாரிகள் வழக்கை விரைந்து விசாரிக்க சொல்லி, சஞ்சய் ராயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் சஞ்சய் ராயின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சஞ்சய் ராய் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர். இந்த வழக்கிலும்,, அவர் மீது சிபிஐ அதிகாரிகள் எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை என்று ஜாமீன் மனுவுக்கு அவர் தரப்பில் வாதம் முன்வைத்தனர். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஏற்கனவே கொல்கத்தா வழக்கை வைத்து அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாமதமாக ஆஜரான விவகாரத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
"பாலியல் கொலை குற்றவாளிக்கு சிபிஐ ஜாமீன் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மற்றும் சிபிஐ இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் புதைக்கும் அஜன்டாவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால், இவ்வளவு முக்கியமான வழக்கில் குற்றவாளியின் ஜாமீன் மனு விசாரணைக்கு சிபிஐ தாமதமாக வரவேண்டிய அவசியம் என்ன" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகித் கோகுலே கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications