உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்
கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனே தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமெர்ஜென்ஸி நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்போது அந்த விமானத்தில் இருந்தார். இன்று அவர் ஹைதராபத் செல்வார்" என்று கூறினார். இதனால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.