கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறியதாக தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான 15 பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் கடந்த மேமாதம் பிறப்பித்த உத்தரவு. ஆனால் இந்த பாதுகாப்பு அம்சங்களை மத்திய அரசு செயல்படுத்தப்படவில்லை என்று கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடினார். மேலும் கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் பராசரன், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கூடங்குளம் அணு உலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் இன்று பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பரிந்துரைத்த 15 அம்சங்களே போதுமானது.. அதையே மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இந்த பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்ற புதிய நிபுணர் குழு அமைக்கவும் தேவையில்லை என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications