காவிரி ஆணையத்தை கர்நாடகா எதிர்க்கும்.. மோடியை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என கர்நாடக மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லி சென்றிருந்தார். இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து சில மனுக்களை அளித்தார்.
பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில அம்சங்கள் கர்நாடகாவுக்கு எதிராக உள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதுபற்றி விவாதித்துதான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் காவிரி ஆணையம் அவசரமாக அமைக்கப்பட்டது தவறு. இதை ஏற்க மாட்டோம்.
10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி அணைக்கட்டு நீர் இருப்பை காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்யும் என்பது அறிவியல் பூர்வம் இல்லாதது. காவிரி பாசன பகுதிகளில் கர்நாடக விவசாயிகள் என்ன மாதிரி பயிர்களை பயிரிட வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் தீர்மானிக்கும் என்பது, விவசாயிகளுக்கு எதிரானது இதை எதிர்க்கிறோம் என்றார் குமாரசாமி.
காவிரி பிரச்சனையில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய திட்டம் உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என குமாரசாமி பதில் அளித்தார்.