காங். சமூக வலைத்தள பிரிவு தலைவரானார் ரம்யா.. இனி எதிரிகளுக்கு "கும்மாங்குத்து"தான்!!
பெங்களூரு: சமூக வலைத்தளத்தில் பாஜகவினர் செய்து வரும் பிரசாரங்களுக்குப் பதிலடி தரும் வகையில் தனது சமூக வலைத்தள பிரிவுக்கு கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி. சமூக வலைத்தள பிரிவு தலைவராக நடிகை ரம்யாவை அது நியமித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரம்யா முன்னாள் எம்.பி. ஆவார். தமிழில் குத்து, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சமூக சேவைப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் ரம்யா.
முன்னாள் எம்.பியாக இருந்தாலும் கூட தொடர்ந்து கட்சிப் பணிகளில்தொய்வின்றி ஈடுபட்டு வருபவர். அவருக்கு சமூக வலைத்தளத்தில் உள்ள பிரபலத்தை உணர்ந்து அவருக்கு இந்தப் புதிய பொறுப்பைக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

ஹூடாவிடமிருந்து
ஹரியானா மாநிலம் ரோதக் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடாவிடம் இருந்து வந்தது சமூக வலைத்தள காங்கிரஸ் தலைவர் பதவி. அதைத்தான் தற்போது ரம்யாவிடம் கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.

கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் அங்கு பாஜக வலுவான பிரசாரங்களை சமூக வலைத்தளம் மூலம் செய்து வருகிறது. இதை சமாளிக்கவே ரம்யாவை கொண்டு வந்துள்ளது காங்கிரஸ் என்கிறார்கள்.

குத்துக்குப் பதில் குத்து
பாஜகவினரின் பதிவுகளுக்குப் பதிலடியாக ரம்யாவின் செயல்பாடுகள் அமையும் என்ற நம்பிக்கையும் காங்கிரஸிடம் உள்ளதாம். அவரது நியமனம் கர்நாடக காங்கிரஸுக்கு சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர்.

தமிழகத் தேர்தல் வரும்போது!
இதேபோல தமிழக சட்டசபைத் தேர்தல் சமயத்தில் நக்மா அல்லது குஷ்புவை சமூக வலைத்தள தலைவியாக நியமிக்குமா காங்கிரஸ் மேலிடம் என்ற கேள்வி இப்போதே தமிழக காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications