'தலித்துகளும் சங்கராச்சாரிகளாக வேண்டும்'... அதிரடி காட்டும் லாலு பிரசாத்!
அனைத்துச் சாதியினரும் சங்கராச்சாரிகளாக, இந்து மத தலைமைப் பதவிகளுக்கு வரவேண்டும் என்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.
ராஜ்கிர்: அனைத்து சாதியினரும், சங்கராச்சாரியார் போல, இந்து மதத்தின் தலைமைப் பீட பதவிகளுக்கு வர வேண்டும் என்று, லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் பகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கு தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ''பாஜக.,வினர் தேசபக்தி என்ற பெயரில் மிகத் தவறான அரசியல் செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்க யாரும் இல்லை என்ற கற்பனையில், ஆதிக்க மனப்பான்மையோடு, பாஜக தலைவர்கள் நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், திட்டங்களையும் வெளியிடுகின்றனர். இதனை நான் எதிர்க்க திடமாக முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.
மேலும்,''பாஜக.,வுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளேன். 2019 லோக்சபா தேர்தலில், பாஜக தோல்வியை சந்திப்பது உறுதி. அதற்கான ஏற்பாடுகளில், நான் தீவிரமாக ஈடுபடுவேன். எப்போதும் இந்துத்துவா பற்றியும், அதன் அடிப்படைகளை பாதுகாப்பது பற்றியும் பாஜக கவலைப்படுகிறது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்.
இந்து மதத்தில், ஆதிக்க சாதியினர்( மட்டுமே சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர் பதவிகளை வகித்து வருகின்றனர். இதனை எதிர்த்து, தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களும் சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்து மதத் தலைமை பதவிகளுக்கு வர நாம் பாடுபட வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. அத்துடன், இந்திய எல்லையில் பெரும் பதற்றம் நிலவும் சூழலில், பாஜக அரசு அதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுவரையிலும் முழு நேர பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பது மிக, கவலை தருகிறது,'' என லாலு பிரசாத் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications