பீகார் தேர்தல்... பா.ஜ.க.வுக்கு எதிராக 'குதிரை' வண்டி யாத்திரை நடத்தும் லாலுபிரசாத்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி நடத்தும் ரத யாத்திரைக்குப் போட்டியாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் 'குதிரை' வண்டி யாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இத்தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், ஐக்கிய ஜனதாதளமும் இணைந்து ஓரணியில் நிற்கின்றன. காங்கிரஸூம் இந்த ஜோதியில் கலந்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தும், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இவர்களுக்கு போட்டியாக பா.ஜ.க. கூட்டணியும் பிரசாரத்தை நடத்தி வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா 160 ரத யாத்திரையையும் தொடங்கி வைத்தார்.
பா.ஜ.க.வின் இந்த யாத்திரைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லாலு பிரசாத் யாதவ் குதிரை வண்டியில் சென்று பிரசாரம் செய்கிறார்.
இது தொடர்பாக லாலு கூறுகையில், பாரதிய ஜனதாவின் ரத யாத்திரை வியாபார ரீதியிலானது. எனது குதிரை வண்டி ரதம் தான் உண்மையானது. கிருஷ்ணன் குதிரை பூட்டிய ரதத்தில் தான் சென்றார். அவர்களது பிரச்சாரத்தை முறியடித்து வெற்றிபெறுவேன் என்றார்.