நெடுஞ்சாலை அருகேயுள்ள மதுபானக் கடைகள் மூடப்படுமா? தீர்ப்பை ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
டெல்லி: நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரம் உள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரும் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்தனர்.
அதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்றுவதற்கான தூரத்தை 500 மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்கக் கோரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மனு தாக்கல் செய்தது.
மேலும் மாநில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. அப்போது 66 மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இதேபோல், நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரத்துக்கு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்துக்கு ரூ.25,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கோர்ட்டில் நேற்று வாதம் முன்வைத்துள்ளது.
வருமானத்துக்காக மனித உயிர்களை பலி கொடுக்க முடியாது. வருமானத்துக்கு மாற்று வழியைத் தேட முயற்சிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications