ஸ்பெக்ட்ரம், தெலுங்கானா, சீக்கியர் படுகொலை... நாடாளுமன்றத்தில் பெரும் அமளி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் வெளியாகி இருக்கும் புதிய தொலைபேசி உரையாடல்கள், தெலுங்கானா, சீக்கிய கலவரம் தொடர்பான ராகுல் பேச்சு உள்ளிட்டவைகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிக்காடானது. இதனால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை அவை தொடங்கியதும் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது இரு அவைகளிலுமே சீமாந்திரா எம்.பிக்கள் ஒன்றாக எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் பதாகைகளையும் அவர் ஏந்தி இருந்தனர்.

வடகிழக்கு மாணவர் மரண சர்ச்சை
லோக்சபாவில் வடகிழக்கு மாணவர் மரணத்துக்கு நீதி கோரி இடதுசாரி எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.

ராகுலுக்கு எதிராக முழக்கம்
1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலை தொடர்பான ராகுல் காந்தியின் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து சிரோமணி அகாலிதளம் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

கலைஞர் டிவி சிடி
ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் மைத்ரேயன் தலைமையில் எழுந்து நின்று கலைஞர் டிவி தொடர்பான புதிய தொலைபேசி உரையாடல்கள் குறித்து விவாதிக்க கோரினர். அப்போது மைத்ரேயன் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடியையும் உயர்த்தி காண்பித்தார்.

நீடித்த அமளி
லோக்சபாவில் சபாநாயகர் மீரா குமாரும் ராஜ்யசபாவில் சபை தலைவர் ஹமீத் அன்சாரியும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்ட போதும் அமளி நீடிக்கவே செய்து.

லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
இதனால் லோக்சபா நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும், மீண்டும் அமளி நீடிக்கவே லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
இதேபோல் ராஜ்யசபாவும் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடிய போதும் அமளி நீடித்ததால் மேலும் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் கூடிய போதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 2 மணிக்கு ராஜ்யசபா கூடிய போது வகுப்புவாத தடுப்பு மசோதா மீது விவாதம் நடைபெற்றது












Click it and Unblock the Notifications