எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிப்ரவரி 6ம் தேதி வரை லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டன.
டெல்லி: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது. மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்பி அகமது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை லோக் சபா கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடன் காங்கிரஸ் எம்பி வேணுகோபால், அகமது மறைவின் காரணமாக ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி தரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்பிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அமளியில் ஈடுபட்டது. சபாநாயகர் இருக்கை அருகில் சென்று எதிர்க்கட்சியினர் கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும், ராணுவத்தில் உணவு சரியில்லை என்று ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் மத்திய அரசால் தொடர்ந்து மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டி ராஷ்டிரிய ஜனதா தள எம்பிகளும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 12 மணி வரை லோக் சபாவை ஒத்தி வைத்தார். பின்னர் கூடிய, லோக் சபாவில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிப்ரவரி 6ம் தேதி வரை லோக் சபாவை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதே போன்று, ராஜ்ய சபாவிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications