ம.பி.யில் சோகம்... கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்!
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நந்த்குமார் சிங் சவுகான் நேற்று இரவு உயிரிழந்தார்.
நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.
கேரளாவில் அதிகம்
கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் மீண்டும் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துமாறும், நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பாஜக எம்பி உயிரிழப்பு
கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டெர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பெரும்பாலான அமைச்சர்களை கொரோனா தாக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். நந்த்குமார் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார்.
கொரோனாதான் காரணம்
நந்த்குமார் சிங் சவுகானுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ' நந்த்குமார் சிங் சவுகான் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிர்வாக திறன்கள் மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்புக்காக நந்த்குமார் சிங் சவுகான் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் என்று மோடி கூறியுள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.