ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஆற்றில் படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே கட்லாபுரா எனும் ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு 19 பேர் இரண்டு படகில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்ததில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேரின் நிலை குறித்து என்ன ஆனது என்று தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உயிரிழந்தோரில் 11 பேரின் உடல்களை மீட்டனர். மற்ற உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒரே படகில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.