பச்சைக் கறி உணவு, மனிதர்களைக் கடிக்கும் நபர்.. மத்தியப்பிரதேசத்தில் ஒரு மிருதன்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பச்சைக் கறியை சாப்பிடுவது, மனிதர்களை கடிப்பது என விசித்திரமாக நடந்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு கடந்த வாரம் நாய்க் கடித்ததில் இருந்து அவர் இதுபோன்று வித்தியாசமாக நடந்துகொள்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவருக்கு என்ன நடந்ததென்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜெயம் ரவியின் மிருதன் படம்போல மனிதரைக் கடிப்பது, பச்சைக் கறி உண்பது போன்ற விநோதமாக நடந்துகொள்ளும் நபரால் மத்தியப்பிரதேசத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் சந்தையில் இருந்த ஒரு நபரையும் கடித்து வைத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் பகுதியைச் சேர்ந்தவர் சோனு. இவர் உள்ளூர் காய்கறி சந்தையில் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மிகவும் வித்தியாசமாகவும், ஆக்கிரோஷமாகவும் நடந்து கொண்டுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சோனுவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாய் கடித்ததில் இருந்துதான் இதுபோன்று அவர் நடந்துகொள்வதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்ததில் இருந்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களைத் தாக்குவது, பச்சையாக இறைச்சியை உண்பது போன்று விசித்திரமாக நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து காய்கறி விற்பனையாளரான முகமது ரஷீத் கூறுகையில், சோனு இந்த சந்தையில் தான் தூய்மைப் பணியாளராக உள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைத் தெருநாய் ஒன்று கடித்தது. அன்று முதல் பச்சையாகவே கறியை உண்பது, அருகில் இருப்பவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது, கடிப்பது என்று வித்தியாசமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி, வெளிநாய்க்கடிக்கான தடுப்பூசியை போடுவது என பல்வேறு உதவிகளை செய்தோம். இருப்பினும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
காய்கறி விற்பனையாளரான நரேந்திர தாக்கூர் கூறுகையில், வெங்காயம் வாங்கும்போது சோனு திடீரென தன்னை கடித்ததாகக் கூறினார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஊசி போடப்பட்டது.
இதுகுறித்து, பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் சுமித் ராவத் கூறுகையில், ரேபிஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. சோனுவை 10 முதல் 12 நாட்களுக்கு முன்னர் நாய் கடித்திருந்தால் வெறிநாய்க்கடி நோய் மிகவும் ஆபத்தாக அமைந்திருக்கும். ஆனால், சோனு தற்போது இவ்வாறு நடந்து கொள்வதற்கு மது அருந்துவதால் ஏற்படும் உளவியல் நோய் காரணமாக இருக்கலாம். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சோனுவிடம் இருந்து பாதுகாப்பாக தள்ளியே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications