மோடி பெரிய மேஜிக் நிபுணர்.. என்ன மாதிரி மேஜிக்கெல்லாம் காட்டுவார் தெரியுமா? விளாசிய ராகுல் காந்தி
ஷில்லாங்: நரேந்திர மோடி சிறந்த மாயாஜாலக்காரர். அவர் நினைத்தால் இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தையும் மாயம் செய்து எடுத்துவிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
60 தொகுதிகள் கொண்ட, மேகாலயா மாநிலத்தில், வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஜோவை என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மூன்று முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று மேகாலயாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், நாலாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் உள்ளது.

மேஜிக் நிபுணர்
ராகுல் காந்தி மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி, ஒரு சிறந்த மேஜிக்காரர். அவர் தனது விரல் அசைவின் மூலம் பொருட்களை தோன்றவும் வைப்பார், மறையவும் வைப்பார். அப்படி பல விஷயங்களை வெற்றிகரமாக அவர் செய்தும் உள்ளார்.

மறைய வைப்பார், தோன்ற வைப்பார்
முறைகேடாளர்களான விஜய் மல்லையா, லலித் மோடி மற்றும் நீரவ் மோடி போன்றோர் மாயாஜால வகையில், இந்தியாவில் இருந்து தப்பியோடினர். அதேபோல இந்திய சட்டத்தில் இருந்து பிடிபடாத வகையில், மாயாஜாலமாக வெளிநாட்டு மண்ணில் தோன்றினர். விரைவிலே மோடியின் மேஜிக்கால், ஜனநாயகமும் இந்தியாவில் இருந்து மாயமாகும்.

ஊழலில் பங்கேற்பு
விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரங்களின் மூலம் தெரியவந்தது ஒன்றுதான். இந்த அரசு ஊழலை ஒழிக்காது, ஊழலில் பங்கேற்கும். இந்திய மக்களின் கனவுகளை நமது பிரதமர் 4 வருடங்கள் முன்பு விற்பனை செய்துவிட்டார். 15 லட்சம் பணம், 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு இப்படி பல கனவுகள்.

மக்களுக்கு பயம்
மலைவாழ் மக்கள் தங்களுக்கு சம பங்கு கிடைக்கும், நிலம் கிடைக்கும், கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்த அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யய உள்ள நிலையில், மக்களுக்கு நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, அச்சம், வன்முறை ஆகியவற்றைதான் பரிசாக அளித்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications