பீகாரில் பயங்கரம்... நீதிபதியை வழிமறித்து சுட்டுக்கொன்ற கும்பல்
பாட்னா: நீதிபதி ஒருவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்றாலே பீகாரைத்தான் உதாரணமாக சொல்லும் நிலை முன்பு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறிவந்த நிலையில் மீண்டும் நெஞ்சை பதறச் செய்யும் சம்பவம் ஒன்று அங்கு பதிவாகியுள்ளது.
ஆசிய அளவில் மிகப் பெரிய கால்நடைக் கண்காட்சி பீகார் மாநிலம் சோனாப் பூரில் நடைபெற்றது. இந்த கால்நடைக் கண்காட்சி கங்கை மற்றும் கந்தாக் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. கண்காட்சியில், ஏராளமான பசு மாடுகள் , குதிரைகள், கழுதைகள், கரடிகள்,குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளும் இடம்பெற்று இருந்தன.
கண்காட்சியை பார்வையிடும் பணிக்காக சென்றிருந்தார் மாவட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியான, ராம் சோலேக் ராய். பணியை முடித்துவிட்டு நேற்றிரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று இவரை சூழ்ந்து நின்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த சம்பவத்தில் நீதிபதி ராம் சோலேக் ராய் பரிதாபமாக பலியானார்.












Click it and Unblock the Notifications