மகாராஷ்டிராவில் 31ம் தேதி புதிய அரசு பதவியேற்பு
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு வருகின்ற 31 ஆம் தேதி அன்று பதவியேற்க உள்ளது. பாஜக சார்பில் மகராஷ்டிர முதல்வர் இன்றைய கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மகாராஷ்டிர சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்க போதுமான அளவுக்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
ஆனால் பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

சிவசேனாவுடன் கூட்டணி:
63 இடங்களில் வெற்றி பெற்று 2 ஆவது பெரிய கட்சியாக விளங்கும் தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கவே பாஜக விரும்புகிறது.

தலைவர்கள் பேச்சு வார்த்தை:
இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஆனால் பாஜகவுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்வது குறித்து சிவசேனா இதுவரை தனது தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

தனித்து ஆட்சி அமைக்க முடிவு:
இதனால் பாஜக புதிய முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா ஆதரவு வழங்காத பட்சத்தில், தனித்து ஆட்சி அமைக்க அக்கட்சி முடிவு செய்திருக்கிறது. புதிய அரசு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 31 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

வரலாற்றில் முதல் முறையாக:
மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் பாஜக அரசு முதல் தடவையாக அமைகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதிய முதல்வர் தேர்வு:
இந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாலை 4 மணிக்கு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்:
புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணிக்காக பாஜக மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாய்ப்பு:
இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார். பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications