ஊழல் வழக்கு: மகா. மாஜி துணை முதல்வர் சகன் புஜ்பால் அமலாக்கப் பிரிவால் அதிரடி கைது!
மும்பை: மகாராஷ்டிரா சதன் கட்டுமான பணியில் ஊழல் முறைகேடு செய்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் சகன் புஜ்பால் அமலாக்கப் பிரிவினரால் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் கடந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் டெல்லியில் ரூ.100 கோடி செலவில் புதிதாக மகாராஷ்டிரா சதன் என்ற கட்டடம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரது மகன் பங்கஜ் புஜ்பால் மற்றும் உறவினர் சமீர் புஜ்பால் ஆகியோரது பெயரும் இந்த ஊழல் குற்றச்சாட்டில் அடிபட்டது. இதைத்தொடர்ந்து மும்பையில் சகன் புஜ்பால் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கில் பிப்ரவரி 1-ந் தேதியன்று சமீர் புஜ்பால் அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு சகன் புஜ்பால் மற்றும் மகன் பங்கஜ் புஜ்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சகன் புஜ்பால் விசாரணைக்காக நேற்று ஆஜரானார். அவரிடம் மகாராஷ்டிரா சதன் ஊழல் புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அமலாக்கப் பிரிவினரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சகன் புஜ்பாலை நேற்று இரவு அமலாக்க பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.
மகாராஷ்டிரா சதன் உள்ளிட்ட அம்மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்களை போலி நிறுவனங்களை உருவாக்கி அதற்கு வழங்கினார் சகன் புஜ்பால் என்பது குற்றச்சாட்டு. இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார்; அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டார் என்பதும் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு.
சகன் புஜ்பாலிடம் விசாரணை நடத்துவதை அறிந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொண்டர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. ஊழல் வழக்கில் சகன் புஜ்பால் கைதாகி இருப்பது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications