எல்லாமே மேக்கப்.. பட்டி டிங்கரிங் பார்த்து பலே வேலை! பணக்கார ஆண்களே குறி.. சமீரா சிக்கியது எப்படி?
மும்பை: திருமணத்திற்கு பெண் கிடைக்காததை பயன்படுத்தி அப்பாவி ஆண்களை ஏமாற்றும் பெண்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் பணத்திற்காக எட்டு ஆண்களை திருமணம் செய்த பெண் ஒன்பதாவது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். இதை அடுத்து அவரை பொறி வைத்து பிடித்திருக்கின்றனர் போலீசார். பணக்கார இஸ்லாமிய ஆண்களை குறி வைத்து அந்தப் பெண் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது.
திருமணம் மோசடிகளில் சிக்கி பணத்தை பறி கொடுப்பது என்பது தற்போது எல்லாம் சாதாரணம் ஆகிவிட்டது. வயதான பெண்கள் கூட மேக்கப் போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் அறிமுகமாகி ஆண்களை ஏமாற்றி வலையில் வீழ்த்தி பணத்தை பறித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய வைக்கும் சம்பவங்களும் நடந்து இருக்கிறது. அப்படித் தான் பெண் ஒருவர் மொத்தம் எட்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா தான் அந்த மோசடி பேர்வழி.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதுவும் அவர் ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் வேலை செய்து வந்த சமீரா பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்தியாவின் பிரபலமான மேட்ரிமோனி வலைதளங்களில் தனது பெயரை பதிவு செய்து தன்னை விவாகரத்து பெற்ற பெண்ணாக காட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது குழந்தை இருக்கும் நிலையில் மிகுந்த வறுமையில் வாடுவதாக அந்த ஆண்களிடம் பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
சிறிது காலம் அவர்களிடம் பேசி திருமணம் செய்த பின் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், பிறருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்கிறார் என போலீசில் பொய் புகார் அளித்து விடுவேன் என மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்திருக்கிறார். 15 ஆண்டுகளில் 8 ஆண்கள் அவரிடம் ஏமாந்திருக்கின்றனர். மேலும் தன்னைக் குறித்து சில தகவல்களை நம்பி வைக்க ஒரு மோசடி கும்பலையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.
15 லட்சம் ரூபாய் பணம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அவர்களிடம் வாங்கி இருக்கிறார். இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பலர் அவரிடம் இழந்து இருக்கின்றனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளை கூட அவர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் எட்டு திருமணம் செய்த சமீரா 9வதாக ஒரு ஆணை திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரை வலையில் வீழ்த்திய நிலையில் சமீராவின் பின்னணி குறித்து அந்த நபர் ஆராய்ந்து இருக்கிறார்.
அப்போது தான் அவரது கொடூர பின்னணி தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து அந்த ஆண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவரை டீக்கடைக்கு வரச் சொல்லி இருக்கின்றனர் போலீசார். அந்த நபரை சந்திக்க சமீரா வந்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மோசடி கும்பலை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.











Click it and Unblock the Notifications