மலேசியா விமானம் போன்றே நடந்த 5 மர்ம விமான விபத்துக்கள்
டெல்லி: மாயமாகியுள்ள மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் போன்று முன்னதாக பல மர்ம விமான விபத்துகள் நடந்துள்ளன.
மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்கு கிளம்பிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமாகியுள்ளது. அந்த விமானம் என்ன ஆனது, அதில் பயணித்தவர்களின் கதி என்ன என்றே தெரியவில்லை.
முன்னதாக இதே போன்று சில மர்ம விமான விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ்
டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் விமானம் 800 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமெரிக்காவின் ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு கிளம்பியது. 230 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் லாங் ஐலேண்டின் கிழக்கு மோரிசஸ் கடற்கரை பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். எரிபொருள் டேங்க் வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த விமான சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இடாவியா
1980ம் ஆண்டு ஏரோலைனீ இடாவியா விமானம் 870 இத்தாலியின் பொலோனாவில் இருந்து பாலர்மோ நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் டிரேனியன் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியாகினர். அந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது இதுவரை தெரியவில்லை.

பான் ஆம்
பான் ஆம் விமானம் 103 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி 243 பயணிகளுடன் ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட்டில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட்டுக்கு சென்றது. அந்த விமானம் ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரில் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியாகினர்.
இந்த விமானத்தை லிபியாவின் அப்போதைய அதிபர் கடாபி தான் தாக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அது தீவரவாதிகளின் வேலை என்றும் கூறப்படுகிறது.

ஏர் பிரான்ஸ்
ஏர் பிரான்ஸ் விமானம் 1611 1968ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி கார்சிகா தீவில் இருந்து நைஸ் நகருக்கு சென்றபோது மெடிடெரேனியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டு பிபிசி ரேடியோவில் அந்த விமானம் ஏவுகணை தாக்கி அல்லது குண்டுவெடிப்பால் சிதறியிருக்கும் என்றும், உண்மை காரணத்தை பிரான்ஸ் அரசு மறைப்பதாகவும் கூறப்பட்டது.

பெர்முடா முக்கோணம்
1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணப் பகுதியில் பறந்த தி ஸ்டார் டைகர் என்ற விமானம் மாயமானது. விமானத்தின் பகுதிகளோ, பயணிகளின் உடல்களோ கிடைக்கவே இல்லை. இந்த சம்பவம் நடந்த மறு ஆண்டே அதே பகுதியில் தி ஸ்டார் ஏரியல் விமானம் மாயமானது. அது குறித்தும் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications