அவரே மண்ணின் மைந்தர் அல்ல.. அவர் கூறும் இந்து மந்திரங்களும் தவறானது... மம்தாவை குறிவைக்கும் பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் நந்திகிராமின் மண்ணின் மைந்தர் இல்லை என்றும் தேர்தலுக்காக வந்துள்ளார் என்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.
வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கடந்த இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக களமிறங்குகிறது.
அதன்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை இழுக்கும் பணிகளிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

நான் ஒரு பிராமணர்
அப்படி இணைந்தவர்களில் ஒருவர்தான் சுவேந்து அதிகாரி. முன்பு மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழந்த் சுவேந்து அதிகாரி, தற்போது அவரை எதிர்த்தே நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை நந்திகாரமில் வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா, தான் ஒரு பிராமணர் என்றும் தனக்கு யாரும் இந்து மதம் குறித்து பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

தவறான மந்திரம்
துர்கை காளி ஆகிய கடவுகளை தான் தினமும் பிரார்த்தனை செய்வேன் என தெரிவித்த அவர், சில மந்திரங்களையும் குறிப்பிட்டார். இந்நிலையில், மம்தாவின் இந்தப் பேச்சுக்கு சுவேந்து அதிகாரி பதிலடி கொடுத்துள்ளார். இன்று பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும் போது, மம்தா கூறிய மந்திரங்களைப் போட்டுக்காட்டிய அவர், இது முழுவதும் தவறான மந்திரங்கள் என்றும் இந்து மதம் பற்றி தெரிந்த அனைவருக்கும் இது தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோயிலுக்குள் செருப்பு
தொடர்ந்து பேசிய அவர்,"அதேபோல நேதாஜி நூற்றாண்டு விழாவின் போது, பொதுமக்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதைக்கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஏன் நேற்றுகூட அவர் செருப்பை அணிந்து கொண்டுதான் கோவிலுக்குள் சென்றார். பிறகு ஏன் அவர் தன்னை இந்து என்று சொல்ல வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

யார் மண்ணின் மைந்தன்
தொடர்ந்து மம்தா பானர்ஜியை வெளியாள் எனக் குறிப்பிட்டுப் பேசிய சுவேந்து அதிகாரி, "அவர் நந்திகிராம் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை. இங்கு அவருக்கு வாக்குகூட இல்லை. ஆனால், நான் அப்படி இல்லை. நான் நந்திகாரம் மைந்தன். இங்குதான் பல ஆண்டுகளாக இருக்கிறேன். நந்திகிராம் மக்களுடனேயே இத்தனை ஆண்டுகள் இருக்கிறேன். மம்தா பானர்ஜி தேர்தலுக்காகத் தான் இங்கு வந்துள்ளார். தேர்தல் முடிந்ததும் அவர் கிளம்பிவிடுவார்" என்றும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.












Click it and Unblock the Notifications