மேற்கு வங்கம்.. மோடி, அமித்ஷா முழு மூச்சாக முட்டி மோதியும் தோற்ற பாஜக! "சம்பவம்" செய்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த மத்திய பாஜக அமைச்சரவையே, மேற்கு வங்கத்தில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்தபோதிலும் கூட, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அங்கு அபார வெற்றி பெற்றுள்ளது.
மதியம் 1.30 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இடதுசாரிகள் வெறும் ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாஜக 3 தொகுதிகளைத்தான் வென்று இருந்தது. ஆனால் அதன் பிறகு தான் அந்த கட்சி விசுவரூபம் எடுத்தது.

பாஜக வளர்ச்சி
ராமநவமி விழாக்கள் நடத்துவது, சமூகவலைத்தளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது என்று மெல்ல மெல்ல காலூன்ற தொடங்கியது அந்த கட்சி. எனவேதான், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையை அந்த வெற்றி அவர்களுக்கு கொடுத்தது. மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து பல முன்னணி தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது பாஜக.

முட்டி மோதிய மோடி
லோக்சபா தேர்தல் வெற்றி கொடுத்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் பல மாநில பாஜக முதல்வர்களையும், பாஜக மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருமே அதிக அளவுக்கான பொதுக்கூட்டங்களை மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தினர். கொரோனா நோய் பரவல் அதிகரித்ததன் காரணமாக, கடைசி கட்டத்தில் தான் பிரதமர் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். ஆனால், அதற்குள்ளாக 7 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்டன.

மமதாவுக்கு நெருக்கடி
கடந்த முறை 6 கட்ட தேர்தல்கள் நடந்த நிலையில், இந்த முறை 8 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மம்தா பானர்ஜி விரும்பவில்லை. தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் பாஜகவினர் ஒவ்வொரு வாக்குப்பதிவின்போதும் மொத்தமாக தொகுதிகளில் குவிந்து தேர்தல் பணியாற்ற வசதியாக இருந்தது. இப்படி எல்லாம் பல வகைகளில் மம்தா பானர்ஜி நெருக்கடியில் சிக்கிய நிலையிலும்கூட அபாரமாக முன்னிலை பெற்றுள்ளது திரிணாமுல் காங்கிரஸ்.

வங்கப் புலி
கடந்த சட்டசபை தேர்தலில் 211 தொகுதிகளை வென்றது திரிணாமுல் காங்கிரஸ். இந்த முறை ஏறத்தாழ அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் கூட மம்தா பானர்ஜிக்கு எதிராக பெரிய எதிர்ப்பு அலை இல்லை. இந்த விஷயத்தில் பாஜக தலைமை தோற்று விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜகவுக்கு கண்டிப்பாக கடந்த முறையை விட மிக அதிக அளவுக்கு சீட் கிடைத்துள்ளது உண்மைதான். ஆனால் ஆட்சி அமைப்போம் என்ற அவர்கள் கனவு தவிடுபொடியாகியுள்ளது. அவர்களால் 3 டிஜிட்டை எட்ட முடியாது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் அரசியல் இடத்தை இப்போது பாஜக பிடித்துள்ளது. ஆனால், வங்கப் புலி என வர்ணிக்கப்படும் மம்தா பானர்ஜி இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications