ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது... கண்டிச்ச கையோடு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்ட மமதா
ஆதாரை எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி : ஆதார் எண்ணை தொலைபேசி எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேஸ் இணைப்பு, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு என்று அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அன்றாடம் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நிறுவனங்கள் மெசேஜ் அனுப்பி குடைச்சல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதைப் போன்றது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. என்னுடைய ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்ன வேண்டுமானாலம் செய்து கொள்ளுங்கள் என்று தில்லாக சவாலும் விட்டார் மம்தா.
இதனிடையே பேச்சளவோடு நின்று விடாமல் ஆதாரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனுதாரர்களில் ஒருவராக இவரும் சேர்ந்துள்ளார். மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்குவதை தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மம்தா தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தான் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆதார் எண்ணை அரசின் நலத்திட்ட உதவிகளுடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மார்ச் 31, 2018 வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.