பெங்களூரின் பிரபல ஹோட்டலில் ஷாக் சம்பவம்.. பெண்கள் டாய்லெட்டை எட்டி பார்த்த சப்ளையர் கைது
பெங்களூர்: பெங்களூரின் பிரபல ஹோட்டல் ஒன்றில் பாத்ரூம் சென்ற பெண்ணை ஒளிந்திருந்து பார்த்து ரசித்ததாக சப்ளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் பிரபல பகுதியான கோரமங்களாவின், 6வது பிளாக் பகுதியில் அமைந்துள்ளது 'வாசுதேவ் அடிகாஸ்' என்ற சைவ உணவகம். இந்த ஹோட்டலுக்கு பெங்களூரின் பல பகுதிகளிலும் கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் நிறைய கிளை ரெஸ்டாரண்டுகள் உள்ளன.
இப்படி பிரபலமான ஒரு ஹோட்டலில்தான் அந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. 20 வயது மதிப்புள்ள இளம் பெண் ஒருவர் கோரமங்களா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஹோட்டலின் சப்ளையர் கைது செய்யப்பட்டார்.
இரவு நேரம்
சம்பவத்தன்று இரவு 10.30 மணிக்கு மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்த பெண் , ஹோட்டலிலுள்ள கழிவறை பகுதிக்கு சென்றுள்ளார். அவரது தோழி சற்று தூரத்தில் நின்றிருந்தார்.
மறைந்து பார்த்த உருவம்
டாய்லெட்டுக்குள் சென்று மாலதி அமர்ந்துள்ளார். அப்போதுதான், கதவு இடுக்கு வழியே யாரோ பார்ப்பதை போல உணர்ந்துள்ளார். இதையடுத்து கூச்சலிட்டார். உடனே அந்த உருவம் அங்கிருந்து சென்றுவிட்டது.
வாக்குவாதம்
அதிர்ச்சியில் வெளியே வந்த மாலதி, தனது தோழியிடம் நடந்த விஷயத்தை கூறினார். ஹோட்டல் மேனேஜரை அணுகி, சம்பவம் குறித்து கூறி குற்றவாளியை பிடித்து தருமாறு கூறினார். ஆனால் மேனேஜரோ அப்படியெல்லாம் இருக்காது, வீணாக சந்தேகப்படுகிறீர்கள் என கூறியுள்ளார்.
சிசிடிவியால் அம்பலம்
இருப்பினும் மாலதியும், அவரது தோழியும் வலியுறுத்தி, ஹோட்டல் சிசிடிவி காமிரா காட்சிகளை போட்டு காட்ட கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மேனேஜரும், காட்சிகளை போட்டு காண்பித்தார். அப்போது, ஹோட்டல் சப்ளையர் கவுஸ் சாப் என்பவர் பெண்கள் டாய்லெட் இருக்கும் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.
சப்ளையர் கைது
இதையடுத்து போலீசில் மாலதி அளித்த புகாரின்பேரில் கவுஸ் சாப் கைது செய்யப்பட்டார். பீதரை சேர்ந்த கவுஸ் சாப் 2 மாதங்கள் முன்பு பணிக்கு சேர்ந்துள்ளார். இருப்பினும், அந்த ஹோட்டல் மேலாளர் மதுவோ, தனது ஊழியர் மீது தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தப்பு நடக்கவில்லை
மாலதியும் அவரது தோழியும் ஹோட்டலுக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். கழிவறையை பயன்படுத்தவே ஹோட்டலுக்குள் வந்தனர் என்றும் அவர்கள் கஸ்டமர்கள் இல்லை என்றும் மது கூறியுள்ளார். தனது ஊழியர் யதேர்ச்சையாக அந்த பக்கம் சென்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சர்ச்சை
எம்ஜிரோடு பகுதியிலுள்ள வாசுதேவ் அடிகாஸ் ஹோட்டலில், பெண் நிருபர் ஒருவர் வாங்கிய பிசிபேலே பாத்தில் கார பூந்திக்கு பதிலாக, எலிபுழுக்கை கிடந்தது சில மாதங்கள் முன்பு அம்பலமானது நினைவிருக்கலாம்.