கணவரை இழந்த பெண்கள்.. மிடில் கிளாஸ்தான் டார்கெட்! ரமேஷ் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கினார்
புவனேஸ்வர்: 7 மாநிலங்களில் 14 பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி ரமேஷ் என்பவரை ஒடிசா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் சிலர் திருமணம் முடிப்பதற்குள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். திருமணம் முடிந்தாலும் மனைவியிடம் சிறு விஷயத்தில் பொய் சொல்ல முடியாமல் சிக்கி கொண்டு தவிப்பதும் உண்டு. ஆனால் இங்கே ஒரு நபர் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் தனது பெயர், தொழிலை மாற்றி கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இறுதியாக போலீசாரிடம் சிக்கியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

தலைமறைவு
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பட்குரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்ற ரமேஷ் ஸ்வாயின் (வயது 58). இவர் பல திருமணங்கள் செய்ததாக அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் 2021 ஜூலையில் புவனேஸ்வர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரமேஷ் ஸ்வாயின் தலைமறைவானார்.

கைது
ரமேஷ் ஸ்வாயினை போலீசார் தேடி வந்தனர். ஒடிசா காந்தகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்த ரமேஷ் ஸ்வாயினை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் 14 பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டு, வெவ்வேறு பெயர் கொண்ட 4 ஆதார் அட்டைகள், கல்வி சான்றிதழ்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லீலை துவக்கம்
இதுகுறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் உமாசங்கர் தாஸ் கூறுகையில், ‛‛கைதான நபர் முதன் முதலில் 1982ல் திருமணம் செய்தார். அதன்பிறகு 2002ல் 2வது திருமணம் செய்தார். இந்த இரு பெண்களும் ஒடிசாவை சேர்ந்தவர்கள். இவர்கள் மூலம் 5 குழந்தைகள் உள்ளன. அதன்பிறகு அவர் தனது லீலைகளை துவங்கினார். 2002ல் இருந்து 2020 வரை தொடர்ச்சியாக பல பெண்களிடம் பழகி திருமண வலையில் வீழ்த்தினார்.

திருமண இணையதள பயன்பாடு
இதற்கு திருமண பதிவு இணையதளங்களை பயன்படுத்தினார். இணையதளத்தில் தனது பெயரை மாற்றி பதிவு செய்வார். பின்னர் அதன்மூலம் பெண்களை தொடர்பு கொள்வார். ஆசை வார்த்தைகள் கூறி ‛டிப்டாப்' உடையில் நேரில் சந்திப்பார். பேச்சில் மயங்கும் பெண்களை அவர் திருமணம் செய்துள்ளார். சில மாதம் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு பணத்தை பறித்து கொண்டு தலைமறைவாகி அடுத்த திருமண வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

டாக்டர் முதல் தனியார் ஊழியர் வரை
குறிப்பாக கைம்பெண்கள், நடுத்தர பெண்களை குறிவைத்து காய் நகர்த்தினார். வழக்கறிஞர்கள், டாக்டர், பாரா மிலிட்டரியில் பணி செய்பவர், தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்கள் உள்பட அதிகம் படித்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் அபேஸ் செய்துள்ளார். இந்த பெண்களிடம் டாக்டர், இந்தோ திபெத் எல்லை படை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எனக்கூறி மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்பட 7 மாநில பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

சிக்கியது எப்படி
ரமேஷ் ஸ்வாயன் இறுதியாக டெல்லியில் பணியாற்றிய ஆசிரியரை திருமணம் செய்து புவனேஸ்வரில் வசித்தார். அவருக்கு சந்தேகம் ஏற்படவே போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். போலீஸ் விசாரணையின்போது ரமேஷ் ஸ்வாயன் அதிகம் பேசவில்லை. மேலும் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் மறுப்பு தெரிவித்து வந்ததாக போலீசார் கூறினர். ஆனால் அவர் செய்த திருமண மோசடிகளுக்கான புகார், சில ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 வது முறையாக கைது
பெண்களை ஏமாற்றி கைதாகி உள்ள ரமேஷ் ஸ்வாயன் இதற்கு முன்பும் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் படிப்புக்கு கல்லூரியில் சீட் வாங்கி தருவது, மருத்துவமனைகள் துவங்க அனுமதி பெற்று தருவது, வேலை, கடன் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவரை ஏற்கனவே ஐதராபாத், எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications