மணிப்பூர் சட்டம் ஒழுங்கு சர்வநாசம்-வீடு எரிக்கப்பட்ட மத்திய பாஜக அமைச்சர் ரஞ்சன் சிங் பகீர் ஒப்புதல்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர் ரஞ்சன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 1,000க்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு தமது வீட்டை தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடி உள்ளார் மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங்.
மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மணிப்பூர் காடுகளிலும் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனமக்களிடையேயான மோதல்தான் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடருகிறது. குக்கிகளைப் போல பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி மக்கள் முன்முயற்சி எடுத்ததால் இந்த வன்முறைகள் வெடித்தன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்துக்கு வருகை தந்து முகாமிட்டு பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு அமைதி குழுக்களை ஏற்படுத்தினார். ஆனால் அமித்ஷாவின் இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதன்பின்னரே மைத்தேயி- குக்கி இரு குழுவினரும் ஆயுதம் ஏந்தி வன்முறைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த வன்முறைகளின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு நேற்று தீக்கிரையாக்கப்பட்டது. 1000க்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையானது.
இந்நிலையில் தமது வீடு எரிக்கப்பட்டது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங், மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துகிடக்கிறது என குமுறி உள்ளார். ரஞ்சன் சிங் வீட்டை தீக்கிரையாக்கியதற்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications