தமிழக- கேரளா எல்லையில் 3 இடங்களில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்! வனத்துறை ஜீப் எரிப்பு!!
பாலக்காடு: தமிழக- கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகள் 3 இடங்களில் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக எல்லையான அட்டப்பாடியில் வனத்துறை அலுவலகத்தை சூறையாடி ஜீப்பையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
கேரளாவின் வயநாட்டில் அண்மையில் மாவோயிஸ்டுகளுக்கும் அம்மாநில போலீசின் தண்டர்போல்ட் படைக்கும் இடையே மோதல் நிகழ்ந்து. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் வேரூன்றியிருப்பது கேரளா- தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.

அட்டப்பாடியில்...
இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளா- தமிழக எல்லையில் 3 இடங்களில் மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக-கேரளா எல்லையான அட்டப்பாடியில் இன்று அதிகாலை 1.30மணிக்கு வனத்துறை அலுவலகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 20 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் குழு நுழைந்து, அங்கிருந்த ஜன்னல் கதவுகளை உடைத்து அலுவலகத்தை சூறையாடியது.
அதன் பின்னர் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பையும் தீ வைத்து எரித்துள்ளனர். அந்த பகுதியில் தங்கியிருந்த வனத்துறை அலுவலர் ஜோசின் மற்றும் காவலர் பாலன் இது குறித்து கூறுகையில், முழக்கங்கள் எழுப்பும் சப்தம் கேட்டு அந்தப் பகுதிக்கு சென்றோம். அவர்கள் ஆயுதங்களை கையில் வைத்திருந்தனர். மொத்தம் 19 பேர் அந்த குழுவில் இருந்தனர். அவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு செல்லும் போது போஸ்டர் ஒன்றையும் ஒட்டிவிட்டுச் சென்றனர் என்றனர்.
இதனைத் தொடர்ந்து தண்டர்போல் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மாவோயிஸ்டுகள் தாக்குதலால் "சைலன்ட் வேலி" தேசிய பூங்கா 3 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காட்டில்...
பின்னர் பாலக்காடு- கோயம்புத்தூர் சாலையில் சந்திரன்நகரில் உள்ள கே.எப்.சி., மெக்டொனால்டு உணவங்கள் மீதும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த உணவகங்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். பின்னர் அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அங்கு போஸ்டர்களை ஒட்டிவிட்டுச் சென்றனர் மாவோயிஸ்டுகள். அந்த போஸ்டரில் சிபிஐ (மாவோயிஸ்ட்), மேற்கு தொடர்ச்சி மலை கிளை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தனர். இந்த உணவகங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் தண்டர்போல்ட் படைப் பிரிவின் முகாம் அமைந்துள்ளது.
வயநாட்டில்...
மேலும் வயநாட்டில் வெல்லமுண்டா சோதனைச் சாவடியை தீ வைத்து எரித்துள்ளனர் மாவோயிஸ்டுகள். அங்கே காட்டுத் தீ என்ற மாவோயிஸ்டுகளின் ஏடு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழக- கேரளா எல்லையில் அடுத்தடுத்து மாவோயிஸ்டுகள் 3 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பது அப்பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications